இரவில் தென்படுகிற மின்மினிப் பூச்சி
உலகத்துக்குத் தான் தான் வெளிச்சம் கொடுப்பதாக
எண்ணிக்கொள்கிறது.
-ஸ்ரீராமகிருஷ்ணர்
நீரும் நீர்க்குமிழியும் ஒன்றே.
நீர்க் குமிழி நீரிலே தோன்றி நீரிலேயே கலந்து விடுகிறது.
அது போல ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே.
-ஸ்ரீராமகிருஷ்ணர்
அன்பு அறிவில் இருந்தால் சத்தியம் பிறக்கும்,
அன்பு மனதில் இருந்தால் கருணை பிறக்கும்,
அன்பு உணர்வில் இருந்தால் காதல் பிறக்கும்,
அன்பு செயலில் இருந்தால் அஹிம்சை பிறக்கும்,
அன்பு கல்வியில் இருந்தால் தர்மம் பிறக்கும்.
- ஸ்ரீராமகிருஷ்ணர்
காந்த ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டுமாதலால்
கடலில் செல்லும் கப்பல்கள் திசை மாறிப் போவதில்லை.
மனிதனுடைய மனம் இறைவனை நாடிவரும்வரையில்
அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் தப்பிப் போகமாட்டான்.
-ஸ்ரீராமகிருஷ்ணர்
எரிகின்ற நெருப்பை
நீரினால் அணைப்பது போல
மனதில் எழுகின்ற கோபத்தைப்
புத்தியினால் அடக்குபவன் மகாத்மா.
-ஸ்ரீராமகிருஷ்ணர்
ஆசை என்பது நீறு பூத்த நெருப்பு;
விரோதம் என்பது மறைந்திருக்கும் வியாதி;
உடலுடன் வாழ்வது ஒரு துயரமே.
-ஸ்ரீராமகிருஷ்ணர்
ஆழ் சமுத்திரத்தில் முத்துக்கள் உள்ளன. ஒரு முறை மூழ்குவதில் முத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் மூழ்கி முயற்சி செய்யவேண்டும். நிச்சயமாக இறுதியில் உங்களுக்கு வெற்றி கிட்டும். அவ்வாறே இந்த உலகத்திலேயே பகவானை காண்பது என்பதும். உங்கள் முதல் முயற்சி பலனளிக்கவில்லை என்றால் இதயம் தளர்ந்துவிடாதீர்கள். முயற்சியில் மீண்டும் மீண்டும் ஈடுபடுங்கள். நிச்சயமாக இறுதியில் நீங்கள் ஈஸ்வர அனுபவம் அடைவீர்கள்.
-ஸ்ரீ ராமகிருஷ்ணர்
நீ சாதாரண உலக விஷயங்களையே நகைச்சுவை ததும்பப் பேசி பொன்னான நேரத்தை வீணாக்குகிறாய். உனக்குள் ஏற்படும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிராமல் உன்னுள் இருத்திக் கொள்வது நல்லது. -ஸ்ரீராமகிருஷ்ணர்
கீழே கொட்டிய கடுகை பொருக்கி எடுப்பது போல,
பல திசைகளிலும் ஓடும் மனதை ஒருமைப்படுத்துவது எளிதன்று.
ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதிக்கமுடியும்.
-ஸ்ரீ ராமகிருஷ்ணர்
பெரிய தவத்தால் அடைய முடியாத பக்தியையும் அறிவையும் மட்டுமே தருமாறு நாம் கடவுளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
- ஸ்ரீ ராமகிருஷ்ணர்
ஒரு கெட்ட பழக்கத்தை விடவேண்டும் என்றால் ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு தீவிரமான முயற்சி தேவை.
-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
உன் மனம் உலகத்திலேயே உழன்று கொண்டிருக்கும்போது, எல்லாம் ஈஸ்வரனே என்று வாயால் மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு யாதொரு நன்மையும் ஏற்படாது.
-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி. அதில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி. -பகவான் இராமகிருஷ்ணர்